சுயமரியாதை மாதம் !
ஆண்டு முழுக்க
நாள் நேரம் நிமிடம் நொடியெல்லாம்
சுயமரியாதை நிறைந்திருக்க !
ஏன் இந்த மாதம் மட்டும் !
இந்த மாதத்தில் ஒலித்தது
பால்புதுமையின் உரிமைக்குரல் !
இதே மாதத்தில் தொடர்ந்து
ஓயாமல் ஒலிக்கிறது
அதே உரிமைக்குரல் !
உரக்கப் பேசியவர்கள்
உரிமைக்குரல் வீசியவர்கள்
விளிம்பு நிலை உயிரின்
வலியை கொண்டு சேர்த்தவர்கள்
வலிமையை உணர வைத்தவர்கள்
அனைவரையும்
திரும்பி பார்க்கிறோம் !
அவர்கள் களைந்து
கடந்து வந்த முட்கள்
நிறைந்த பாதையில்
இன்று நாங்கள்
பெருமிதத்துடன்
பீடுநடையிடுகிறோம் !
முட்கள் களைய களைய
பிற்போக்கு விதைகளால்
முளைத்துக்கொண்டே
இருக்கிறது பாதை நெடுகிலும் !
எங்கள் இரத்தப்போக்கு
அவ்வளவு பிடித்திருக்கிறதா
என்ன ?
அவர்களின்
வியர்வைத்துளியின்
ஊடே உட்புகுந்த கதிர்கீற்றில்
ஒளிர்கிறோம்
வானவில்லாய் நாங்கள் !
ஆனால் கண்ணீர் துளிகள்
ஓய்ந்த பாடில்லை !
எங்கள் கண்ணீர் உங்களுக்கு
உவர்க்கவில்லையா ?
நீங்கள் அடுக்கடுக்காய் பேசும்
பிற்போக்கு மதமொழிகள்
அருவருக்கத்தக்கவை !
அடிப்படைவாத மனநோய் !
உடலுக்கு ஒவ்வாவதவை
வெளியேறுகிறது மலமாய் !
அறிவுக்கு ஒவ்வாதவையும்
மலமே !
அதிகம் சேர்த்துக்கொள்ளாதே !
மலத்தில் இருக்கும் புழுவளவேனும்
மூளையிருப்பின்
பழமைவாதம் சலவை செய் !
மூடச்சமூகமே
சமதர்மத்தை கட்டியணைக்க
தகுதிபெறு !
இந்த கொண்டாட்டம்
இந்த இராஜபாட்டை
எங்களுடையது !
சமதர்மத்திற்குறியது
பாலின பாகுபாடில்லாதது
முத்தங்களும் அணைப்புகளும்
நிறைந்தது !
ஆடல் பாடல் ததும்பியது !
இயற்கையால்
தூரிகை தீட்டப்படும்
வானவில்லின் இருப்பை
மழைநீர் உறுதிசெய்கிறது !
தீட்டும்போது துளித்துளியாய்
தெறித்த விந்துக்களாம்
நாங்கள் ! ஆம்
மத சாதிய இன வர்ணத்தில்
அடங்காத
அனைவருக்கும் பொதுவான
அழகியல் சமத்துவமாம்
வானவில்லாய்
பூமிதனில் ஒளிர்கிறோம் !
விண்ணிலிருந்து வழிந்தொழுகி
வீதியில் கரைப்புடண்டோடி
காட்சியளிக்கிறோம்
இதே மாதத்தில் !
தடுத்து நிறுத்த நிறுத்த
அடுத்தடுத்த அடியில் முன் நகர்வோம் !
– அக்னி பிரதீப்
