இந்த போராடும் கால்களுக்கு ஓய்வு என்ற வார்த்தைக்கு அகராதியில் இடமில்லை. எழுதி தேய்ந்த இந்த கைகளை எழுத்தும் ஏக்கம் கொண்டு பார்க்கிறது. திருநர் சமூக மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை மட்டுமே தன் உயிர் மூச்சாக ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் களப்போராளி, எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், சிறந்த நிர்வாகி என பல ஆளுமைகளை உள்ளடிக்கி கொண்டுள்ள திருநங்கை பிரியாபாபு அவர்களை பால்மணம் மின்னிதழ் பேரளுமை பிரியாபாபு என்று அழைப்பதில் உள்ளபடியே பெருமையும் பேரானந்தமும் கொள்கிறது.
ஐம்பது வயதை நெருங்கிய பிரியா பாபு அவர்கள் கடந்து வந்த பயணம் மிகச் சாதாரணமானது அல்ல. பொதுசன மக்களாகிய அனைவரும் இங்கு பொருளாதாரம் ,லட்சியம் என தாங்கள் விரும்பிய வாழ்வை ஏற்பதற்கு ஒரு போராட்டத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், திருநங்கை சமூக மக்கள் தங்களது வாழ்க்கைக்காகவும் போராட வேண்டும். அந்த வாழ்க்கையை பசி, பட்டினி இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற இரட்டை போராட்டத்தை திருநங்கை சமூக மக்கள் மேற்கொள்கின்றனர். இத்தகைய போராட்டங்களை பிரியா பாபு அவர்கள் தங்களுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளாமல் தான் சார்ந்துள்ள சமூக மக்களுக்கும் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதுதான் சிறப்பு.
களத்தில் இறங்கி போராடுவது என்பது சாதாரணமான வாய்ச்சவடால் அல்ல. இந்தக் களம் கரடுமுரடான பாதைகளை கொண்டது. இந்தப் பாதையை போராட்டங்கள், சிந்தனைகள், எழுத்துக்கள், மற்றும் கலை அனைத்து விதங்களிலும் கடந்து தனித்து நிற்கிறார். 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம் இன்றும் வீறுநடை போடுகிறது. தென்தமிழகத்தில் திருநங்கை மக்களுக்காக பிரியா பாபு அவர்கள் செய்த பணிகளை அளவிட்டு அடைத்துவிட முடியாது. எனினும், சிலவற்றை கூற கடமைப்பட்டுள்ளோம். அதில் முதன்மையானது திருநர் ஆவண மையம், மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு திருநங்கைகளின் வாழ்வியலை பொது சமூகம் கற்றுணர ஒரு ஆவணப் கெட்ட வார்த்தைகள் இருந்து வருகிறது. இதற்கு முழுமுதல் காரணம் அமைப்பை நிறுவிய பிரியா பாபு அவர்கள்தான். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் திருநர் மக்களுக்கான திரைப்படத் திருவிழா, ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தல், திருநர் இலக்கியவிழா, திருநர் அழகுப் போட்டி என பல்வேறு வடிவங்களில் திருநர் மக்களுக்காக தன்னுடைய சேவையை தொடர்ந்து செய்துவருகிறார் பிரியா பாபு.
திருநங்கை, திருநம்பி மக்களுக்கு பொருளாதார வாழ்வியலை சீரமைக்க அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அதேபோல் இவர் வாங்கிய விருதுகளும் எண்ணிலடங்காதவை. தனக்கான தனித்தன்மையுடன் தன்னிகரில்லா சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து திருநங்கை சமூக மக்களுக்கும் பொது மக்களுக்கும் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து வரும் பிரியா பாபு அவர்களை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைத்து அவர்களின் பணி தொடர்ந்து சிறந்து செயல்பட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி
வணக்கம்
-அகமகிழ் செய்திகள் பிரிவு.,
அணியம்.